Super User

Super User

அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது, நாளை சல்லிக்கட்டு

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய தமிழகத்தின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு களங்கள் நாளை திறக்கப்பட்டு வாலை முறுக்கியபடி காளைகள் நாளை சீறிப்பாய உள்ளன. அதை மீசை முறுக்கிய தமிழ் காளைகள் பாய்ந்து அடக்க உள்ளனர். உலகமே தமிழர்கள் ஒற்றுமையையும், போராட்ட குணத்தையும் பார்த்து வியக்கும்.

ஆம்.. ஆளுநர் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த கையோடு, மேற்கண்ட மூன்று ஜல்லிக்கட்டு களங்களிலும் உள்ளாட்சி ஊழியர்கள் தண்ணீர் தெளித்து சுத்தப்படுத்தும் வேலையை தொடங்கியுள்ளனர். மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ் நேரில் ஆய்வு செய்தார்.

முதல்வர் பன்னீர்செல்வம் இன்று இரவு மதுரை செல்ல உள்ளார். நாளை காலை 10 மணிக்கு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வரே நேரில் தொடங்கி வைக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் வெளியானதும் மெரினா, அலங்காநல்லூர், கோவை வ.உ.சி மைதானம், மதுரை தமுக்கம் மைதானம் உள்ளிட்ட பல நகரங்களிலும் குழுமியுள்ள மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் 45வது அதிபராக பதவியேற்றார். முன்னதாக துணை அதிபராக மைக் பென்ஸ் பதவியேற்றுக்கொண்டார். சம்பிரதாய நிகழ்வாக, நேற்றிரவு வெள்ளை மாளிகை அமைந்துள்ள தெருவில் உள்ள ஃப்ளேர் ஹவுஸில் ட்ரம்ப் தங்கினார். அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கும் அனைவரும், இங்கு ஒருநாள் இரவு தங்குவது வழக்கம்.

இதைத் தொடர்ந்து, அமெரிக்க நேரப்படி இன்று காலை 8.30 மணிக்கு புனித ஜான் எபிஸ்கோயல் தேவாலயத்தில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் டொனால்ட் ட்ரம்ப், அவரது குடும்பத்தினர் மற்றும் அமைச்சரவையில் இடம்பெறுவோர் பங்கேற்றனர்.

இதன்பிறகு வெள்ளை மாளிகையில் ட்ரம்ப், அரவது மனைவி மற்றும் அமைச்சரவையில் இடம்பெறுவோருக்கு, அதிபர் பதவியிலிருந்து விடைபெறும் பராக் ஒபாமா, அவரது மனைவி மிச்செல் சம்பிரதாய முறையில் தேநீர் விருந்து அளித்தனர். இதன்பிறகு பதவியேற்பு விழா நடைபெறும் வாஷிங்டனின் கேப்பிட்டல் ஹில் பகுதிக்கு, ட்ரம்ப் மற்றும் ஒபாமா ஆகியோர் பாதுகாப்பு புடை சூழ காரில் பயணித்தனர். கேப்பிட்டல் ஹில் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர்.

முன்னாள் அதிபர்களான ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் ஆகியோரும், அதிபர் தேர்தலில், ட்ரம்ப்பிடம் மோதி தோல்வியடைந்த ஹிலாரி கிளிண்டனும் பதவியேற்பு விழாவுக்கு வருகை தந்துள்ளனர். இந்திய நேரப்படி இரவு 10.15 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. ஆரம்ப கட்ட நிகழ்ச்சிகளுக்கு பிறகு துணை அதிபராக மைக் பென்ஸ் பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ஜி ராபர்ட், ட்ரம்ப்புக்கு அதிபராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அப்போது அரசு சார்பில் பீரங்கி குண்டுகள் முழங்க மரியாதை கொடுக்கப்பட்டது. மக்கள் ஆரவாரம் செய்தனர். இதையடுத்து அவர் நன்றியுரையாற்றினார். நியூயார்க்கைச் சேர்ந்த தொழிலதிபரான டொனால்டு டிரம்ப், கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில், அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும் ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான ஹிலரி கிளிண்டனை மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.

ஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு எதிர்க்கும்

ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அவசர சட்டம் கொண்டுவந்துள்ள நிலையில் அதற்கு தடை கோருவது எப்படி என்பது குறித்து பீட்டா அமைப்பு நிர்வாகிகள் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக தமிழக அரசு உருவாக்கியுள்ள அவசர சட்ட வரைவுக்கு, மத்திய சட்டம், கலாசாரம், வனத்துறை அமைச்சகங்கள் ஒப்புதல் வழங்கி குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளன.

குடியரசு தலைவர் நாளேயே சட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பீட்டா அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் பூர்வா ஜோஷிபூரா, அளித்த பேட்டியில் "ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கொண்டு வரும் அவசர சட்டம் குறித்து நாங்கள், எங்களது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். சட்ட ரீதியாக உள்ள அனைத்து வழிகளும் ஆலோசனை செய்யப்படுகிறது. விலங்குகளை காப்பாற்ற வேண்டியது பீட்டா அமைப்பின் கடமை. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பீட்டா பலிகடா ஆக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பாக அரசும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் நீதி நிலைநாட்டப்படும். இந்திய சட்டப்படி ஜல்லிக்கட்டு என்பதே சட்ட விரோதம். இதுபற்றி தமிழர்களுக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். குடியரசு தலைவர் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினால் உடனேயே ஜல்லிக்கட்டை நடத்த தமிழக அரசு உரிய ஆயத்தப் பணிகள் செய்துள்ளது. எனவே சட்டத்திற்கு விரைந்து தடை பெற்றுவிட என்ன செய்யலாம் என பீட்டா ஆலோசித்து வருகிறது.

அவசர சட்டம் தீர்வாகது; நிரந்தர தடை நீக்கம் தேவை

2011ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் தடுப்பு பட்டியலில், காளைகளை அப்போதைய, மத்திய சுற்றுசூழல் மற்றும வனத்துறை அமைச்சகம் சேர்த்தது. இதனால், ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதன்பிறகு விலங்குகள் தடுப்பு பட்டியலில் இருந்து காளைகளை நீக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை. இந்நிலையில், தற்போது மாநில அரசு ஒரு அவசர சட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வழியாக குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்த சட்டத்திற்கு அனேகமாக அனுமதி கிடைத்துவிடும் என்பது மத்திய அரசின் சமிக்ஞை உணர்த்துகிறது. ஆனால் இது ஒரு தற்காலிக தீர்வுதான். காளைகளை காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து விலக்க மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதே நிரந்தரமான தீர்வாக இருக்க முடியும். இக்கோரிக்கையை வலியுறுத்தியே இன்று டிவிட்டரில் #ammendpca என்ற பெயரில் ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. இப்போராட்டத்தின் வெற்றி என்பது சட்ட திருத்தத்தில்தான் அடங்கியுள்ளது. விலங்குகள் வதை தடுப்பு சட்டம் 160ல் திருத்தம் செய்வதன் மூலம் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு உரிமை தொடரும். இந்த சட்டத்தின் பிரிவு 11என், ஜல்லிக்கட்டை விலங்குகளுடனான சண்டையாக வர்ணிக்கிறது. அதை மாற்ற வேண்டும். பிரிவு 11/3 கலாசாரம் மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளுக்காக காளைகளை பயன்படுத்த கூடாது என கூறுகிறது. அந்த ஷரத்தை நீக்க வேண்டும். அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே இதை செய்ய முடியும். அதற்கான அழுத்தத்தை தமிழக எம்.பிக்கள் தொடர்ச்சியாக கொடுக்க வேண்டும். தமிழக மக்களும் தங்கள் எழுச்சி மூலம் இதையும் சாதித்து காட்ட வேண்டும்.

ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; ஓ பன்னிர் செல்வம்

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக அவசரச் சட்டம் கொண்டுவரப்போவதாக தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார்.

ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அவசர சட்டம் நாளை பிறப்பிக்கப்படும் என்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், காளைகளை காட்சிப்பட்டியலில் இருந்து நீக்க வேண்டும், மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராடி வருகின்றனர்.

இளைஞர்கள், மாணவர்களின் போராட்டத்தில் அனல் பறக்கிறது. அக்னியின் வீச்சு தலைமைச் செயலகத்தை எட்டிப்பார்க்க, உடனடியாக டெல்லி கிளம்பினார் பிரதமர் ஓ.பன்னீர் செல்வம். பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் பலன் ஏதும் இல்லை.
அதே நேரத்தில் அரசியல் வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தாமல் அவசர சட்டம் பிறப்பிப்பதற்கான வழிமுறைகளை செய்து விட்டு இன்று தமிழகம் திரும்பியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி உறுதியாக நடக்கும் என்றார். மக்கள் விருப்பப்பட்டால் ஜல்லிக்கட்டு போட்டியை நானே தொடங்கி வைப்பேன் என்றும் கூறினார். ஜல்லிக்கட்டு போட்டி நடத்த பிரதமரை சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கான உரிய அவசர சட்டம் நாளை பிறப்பிக்கப்படும். குடியரசுத்தலைவர் வெளியூர் சென்றுள்ளதால் அவர் வந்து ஒப்புதல் அளித்த உடன் அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்றும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். எந்த தடை வந்தாலும் அதை சட்டரீதியாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்போம். இளைஞர்கள் விரும்புவது போல விரைவில் தமிழகத்தில் வாடிவாசல் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளிக்குதிக்கும் என்றும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

ரவிராஜ் கொலைவழக்கு தீர்ப்புக்கு எதிரான மனு தள்ளுபடி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜ் ரவிராஜ் படுகொலை வழக்கில், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனு, தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது

தாயகத்திலும் சல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம்

தமிழக மக்களின் ஜல்லிக்கட்டு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தாயக உறவுகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.


இன்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு நகரில் காந்தி சதுக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழர்கள் ஆர்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வாசக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு ஒருமித்து கோஷங்களை எழுப்பினர்.

ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட குறிப்பாக இளைஞர்களினால் வலியுறுத்தி கூறப்பட்டது.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு எதிர்வரும் காலங்களில் இலங்கை தமிழர்கள் மத்தியிலும் இடம் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலரும் வெளியிட்டனர்.

யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கின்றது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றிலில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள், யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழகத்தின் கோரிக்கைக்கு பலம் சேர்க்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஏந்தியிருந்தனர்.

யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த இளைஞர் கழகங்கள், இளைஞர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் இதில் பங்கெடுத்திருந்தனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரகுமான் உண்ணா நோன்பு

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழகமெங்கும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், தான் தமிழக உணர்வுக்கு ஆதரவாக நாளை (வெள்ளிக்கிழமை) உண்ணாவிரதம் இருக்கப் போவதாக பிரபல இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று ஏ. ஆர். ரஹ்மான் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில், ''தமிழகத்தின் உணர்வினை ஆதரிக்கும் விதமாக நான் நாளை உண்ணாவிரதம் மேற்கொள்ள இருக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு நாட்களாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகமெங்கும் பல இளைஞர்கள், மாணவர்கள் , பெண்கள் போராடி வருகின்றனர்.

பல திரைப்பட நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயரிப்பாளர்களும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவினை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் தமிழக உணர்வுக்கு ஆதரவாக நாளை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டத்தை அடக்க பொலிஸ் தயக்கம்

மெரினாவில் இளைஞர்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருவதாக சென்னை காவல்துறை பாராட்டு தெரிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியான தகவலையும் காவல்துறையினர் மறுத்துள்ளனர். சென்னை மெரினாவில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் சென்னை மெரினாவில் திரண்டுள்ளனர்.

மாணவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இதுதொடர்பாக விளக்கம் அளித்த சென்னை காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளனர். மெரினாவில் மாணவர்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர். மேலும் மாணவர்கள் மீது நடவடிக்கை என வெளியான தகவல் வதந்தி என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள்

மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. நள்ளிரவு நேரத்திலும் மெரினாவில் இளைஞர்களும் பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக குவிந்து வருவதால் அப்பகுதி முழுவதும் மனித தலைகளாக காணப்படுகிறது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு வழக்கறிஞர்கள், வியாபாரிகள் தனியார் வாகன ஓட்டுநர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மாணவர்களின் போராட்டம் வலுத்து வருவதால் ஏராளமான கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டம் 4வது நாளை எட்டியுள்ளது. நள்ளிரவு நேரம் என்றும் பாராமல் சென்னை மெரினா கடற்கரைக்கு ஏராளமான இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் குவிந்து வருகின்றனர்.

பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக குவிகின்றனர்.சென்னை மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களும் மெரினாவுக்கு படையடுத்து வருகின்றனர். இதனால் சென்னை கலங்கரை விளக்கம் முதல் எம்ஜிஆர் நினைவிடம் வரை மக்கள் கூட்டமாக காணப்படுகிறது. மெரினாவில் குவிந்துள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…