Super User

Super User

காஸ்ரோ அவர்களின் இறுதி மரியாதை நிகழ்வு உலகத்தலைவர்களுடன்...

25/11/2016 அன்று வெள்ளிக்கிழமை தனது 90-வது வயதில் காலமான கியூபாவின் புரட்சிகர தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதி வணக்க நிகழ்வும் மரியாதை நிகழ்வும் இன்று ஹவானாவில் உலகத்தலைவர்களின் பன்கேற்புடன் நடந்துவருகின்றது,.

ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் மற்ற புரட்சிகர தலைவர்களின் போராட்டங்களை விளக்கும் பழைய படங்கள் காட்சிப்படுத்தப்பட்டும், கியூபாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டும் இந்த பேரணி நிகழ்வு தொடங்கியது.

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் பொலிவியா அதிபர் ஈவோ மொராலெஸ் ஆகியோர் உள்ளிட்ட உலக மற்றும் பிராந்திய தலைவர்கள், இந்த பேரணி நிகழ்வுக்காக ஹவானாவில் உள்ள புரட்சி சதுக்கத்தில் பல ஆயிரக்கணக்கான கியூபா மக்களுடன் இணைந்துள்ளனர்.

C.I.A தலைவர் டொனால்ட் ட்ரம்பிற்கு எச்சரிக்கை

அமெரிக்க சீஐஏ இயக்குனர் டொனால் ட்ரம்பினை எச்சரித்துள்ளார். இரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை தான் கிழித்தெறியப் போவதாக டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியபடி அவர் நடந்து கொண்டால், அது பேரழிவாகவும், அதிகபட்ச முட்டாள்தனமாகவும் அமையும் என்று அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமையான சிஐஏ அமைப்பின் இயக்குநர் ஜான் பிரன்னன்எச்சரித்துள்ளார்.

புதிதாக பொறுப்பேற்கவுள்ள டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் ரஷ்யாவின் வாக்குறுதிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்றும், சிரியாவில் வேண்டுமென்றே நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு ரஷ்யா தண்டிக்கப்பட வேண்டுமென்றும் ஜான் பிரன்னன் தெரிவித்தார்.

வெளியுறவுத் துறை விவகாரங்களில் அமெரிக்காவின் தற்போதைய அதிபரான ஒபாமாவின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை டிரம்ப்பும், வரவிருக்கும் அவரது அரசும் கைவிடக்கூடாது என்று கேட்டுக் கொண்ட சிஐஏ இயக்குநர், இதில், டிரம்ப் நிர்வாகம் ஒழுங்கு மற்றும் மதிநுட்பத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், விசாரணை முறைகளில் ஒன்றாக விசாரணை செய்யப்படுபவர்களையும், சந்தேக நபர்களையும் நீரில் சித்ரவதை செய்யும் வாட்டர் போர்டிங் முறைக்கு எதிராகவும் ஜான் பிரன்னன் கருத்து வெளியிட்டுள்ளார்.

கருணா எனப்படும் முரளிதரன் கைது

சிங்கள அரசுடன் சேர்ந்து ஒஒட்டுக்குழுவாக இஇயங்கிவந்த கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் நிதி குற்ற விசாரணைப் பிரிவில்   இன்றையதினம் ஆஜராகியநிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
கடந்த ஆட்சியின்போது பிரதி அமைச்சராக பதவி வகித்தகாலத்தில்   அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்த  குற்றச்சாட்டு தொடர்பிலும் ஆட்சி மாறிய நிலையில் அவர் பயன்படுத்திய வாகனங்களை மீளவும் அரசிடம் ஒப்படைக்க தவறியமை குறித்து   வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இன்றையதினம் அழைக்கப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசார ணைகளை அடுத்து அவர் கைது செய்யப்பட்டநிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தீர்வே தேவை: உருத்திரகுமாரன்

சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான ஏற்பாடு ஒன்றே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக அமைய முடியும்! அதற்கென உழைப்பதையே மாவீரர்கள் கனவை நனவாக்கும் எமது அறமாக ஏற்கும் உறுதி எடுப்போம்!
 
 
இன்று மாவீரர் நாள்.
 
தமிழீழ தேசத்தின் விடுதலைக்காய் தம் உயிரை ஆகுதியாக்கிய நமது மாவீரர்களை நாம் எமது இதயக்கோவிலில் வைத்துப் பூசிக்கும் நாள்.
 
மாவீரர்கள் நமது மக்களின் விடுதலைக்காய் களமாடினார்கள். நெருப்பாற்றைத் தாண்டினார்கள். புயலை வாயால் ஊதிக் கடந்தார்கள். காற்றுப் போகமுடியா வெளியில் கூடப் புகுந்து பகை அழித்தார்கள்.
 
அவர்கள் மண்ணில் வீழும் போதெல்லாம் நமது மண்ணின் விடுதலைக்காய் வித்தாய் வீழ்ந்து போவதாகவே எண்ணிக் கொண்டார்கள். தமிழீழ தேசம் தனது விடுதலைக்காய் இறுதிவரை போராடும் என்பதே மாவீரர்களின் இறுதிமூச்சின் நினைவாக இருந்தது.
 
மாவீரர்கள் ஆண்டபரம்பரை மீண்டுமொருமுறை ஆள்வதில் என்ன தவறு என்ற பழம் பெருமையினை மீட்டெடுக்கும் நோக்குடன் ஆயுதம் தரித்தவர்கள் அல்ல. மேடைகளில் வீரவசனம் பேசும் அரசியலை நடத்தியவர்களும் அல்ல. 
 
சிங்கள பௌத்த பேரினவாதத்தின் திட்டமிடப்பட்ட தமிழின அழிப்பில் இருந்து தமிழர் தேசத்தைப் பாதுகாத்து எமது கௌரவமான இருப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காகவே மாவீரர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். 
 
எவ்வித தேசிய சமூக ஒடுக்குமுறைகளுக்கும் அப்பாற்பட்டு அதியுயர் சமூகநீதி நிலவும் தேசம் ஒன்றினைப் படைக்க வேண்டும் என்ற இலட்சிய உறுதியின்பாற்பட்டே போராட்டத்தீயில் அவர்கள் குதித்தார்கள். 
 
மாவீரர்கள் ஆயுதங்கள் மீது கொண்ட காதலால் கருவி ஏந்தியவர்களுமல்ல. இவர்களின் போராட்டப்பாதையினை எதிரியின் ஆயத வன்முறைதான் நிர்ணயம் செய்தது. 
 
தமிழ் மக்களின் அமைதிவழிப் போராட்டங்களும் எதிர்ப்பும் ஆயுதமுனையில் நசுக்கப்பட்டபோது அதன் தர்க்கரீதியான எதிர்வினையாகவே இவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டி வந்தது. 
 
சிங்கள தேசத்தின் தலைவர்கள் பௌத்த சமயக் கோட்பாடுகளின் பாற்பட்டு உண்மையாக நடந்திருப்பார்களேயாயின் ஆயுதம் ஏந்தியிருக்க வேண்டிய  அவசியம் எமது மாவீரர்களுக்கு ஏற்பட்டிருக்காது. 
 
மாவீரர்களின் போராட்டமே தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு அனைத்துலக கவனத்தைப் பெற்றுத் தந்தது. தமிழ் மக்களின் நெஞ்சங்களில் எல்லாம் மாவீரர்கள் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். அவர்களது நினைவுகள் தமிழ் மக்களின் மத்தியில் என்றும் நிலைத்திருக்கும். இந்த நினைவு எமது சுதந்திர வேட்கையைச் சுமந்து நிற்கும்.
 
அன்பான மக்களே!
 
நாம் இன்று வரலாற்று முக்கியத்துவம் மிக்கதொரு காலகட்டத்தில் நிற்கிறோம். மாவீரர்களின் கனவு சுமந்து சுதந்திர வாழ்வுக்காகத் தொடர்ந்து போராடுவதா அல்லது சிங்களப் பேரினவாதத்தின் மேலாண்மையினை ஏற்று அடிமைவாழ்வில் சிறுமைப்பட்டுப் போவதா என்பதைத் தமிழ் மக்கள் முடிவு செய்ய வேண்டிய காலகட்டம் இது. 
 
நல்லாட்சி என்ற பெயரிலும் தமிழ் மக்களுக்கு ஏற்புடையதான அரசியல்தீர்வு என்ற போர்வையிலும் மாயமான்கள் எம் முன்னால்; உலவி வரும் காலம் இது. வெளித்தோற்றத்தில் காட்டப்படும் மினுமினுப்பையும் பளபளப்பையும் கண்டு ஏமாறாது தமிழீழ மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய தருணம் இது. 
 
நமது தலைவர்கள் தமது இயலாமை காரணமாகவோ அல்லது அறியாமை காரணமாகவோ அல்லது தம்மை யதார்த்தவாதிகள் என்று கருதிக் கொள்ளும் நிலை காரணமாகவோ அல்லது சொந்தநலன்கள் காரணமாகவோ இந்த மாயமான்களை தமிழ்மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் முயற்சியினைத் தொடர்ந்தும் மேற்கொள்ளாத வகையில் தமிழ் மக்கள் அதனைத் தடுத்த நிறுத்த வேண்டும். நமது மாவீரர்களின் பெயரால் நாம் அதனைச் செய்துதான் ஆக வேண்டும். 
 
தற்போதய ஆட்சியாளர்கள் தமது ஆட்சியினை நல்லாட்சி என அழைத்துக் கொள்கின்றனர். முன்னைய குடும்ப ஆட்சியின் அதிகார மையத்தை ஆட்டம் காணச் செய்தமையின் மூலம் ஆட்சிமாற்றம் சிங்கள மக்களுக்குச் சில நன்மைகளை வழங்கியிருக்கக்கூடும். 
 
தமிழ் மக்களைப் பொறுத்தவரை இவ் ஆட்சியினை நல்லாட்சி என எவ்வாறு உணர முடியும்? தமிழ்மக்களுக்கு எதிரான இனஅழிப்பை புரிந்தவர்களும் இனஅழிப்புக் குற்றவாளிகளும் நிறைந்தவொரு ஆட்சியே இது. 
 
தமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்து நிற்கும் சிங்களப்படையினரைத் தமிழர் தாயகபூமியில் இருந்து அகற்ற மறுக்கும் ஆட்சியே இது.
 
அரசியற் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்ட போர்க்கைதிகளை விடுதலை செய்வதற்கு எவ்வித தயவுதாட்சணியமுமின்றி மறுத்துக்கொண்டிருக்கும் ஆட்சியே இது. 
 
இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிப்பதாகக் கூறிய தமிழர் காணிகளை முழுமையாக விடுவிக்காது இழுத்தடிக்கும் ஆட்சியே இது. 
 
பல்கலைக்கழக மாணவர்களை வீதியில் வைத்துச் சுட்டுக் கொல்லும் ஆட்சியே இது. 
 
இனவெறுப்பினை உமிழும் புத்தபிக்குகள் சட்டநடவடிக்கை எதுவுமின்றி சுதந்திரமாக உலவ இடம் தரும் ஆட்சி;யே இது. இத்தகை ஆட்சியை எவ்வாறு நாம் நல்லாட்சியெனக் கொள்ள முடியும்?
 
முன்னைய மகிந்த இராஜபக்ச ஆட்சியின் கொடூரம் காரணமாகவே தமிழ் மக்கள் ஆட்சிமாற்றத்துக்கு ஆதரவு வழங்கினர். ஆனால் இப்புதிய ஆட்சியினை நல்லாட்சி என அங்கீகரிப்பதற்குத் தமிழ் மக்கள் தயாராக இல்லையென்பதே உண்மை. 
 
இந்த ஆட்சியாளர்கள் மட்டுமல்ல சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பிடியில் சிக்குண்டு இறுகிப் போய் இருக்கும் சிறிலங்கா ஆட்சியாளர்கள் எவராலும் தமிழ் மக்களுக்கு நல்லாட்சியினை வழங்க முடியாது.
 
தமிழ் மக்களைப் பொறுத்தவரை தமிழ் இனத்தை ஒரு தேசமாக அங்கீகரித்து, இலங்கைத் தீவின் வடக்கு – கிழக்குப் பிரதேசங்களை தமிழர் தாயகப் பகுதியாக ஏற்றுக்கொண்டு, தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழீழத் தனியரசு உட்பட்ட தீர்வு வடிவங்களை உள்ளடக்கிய மக்கள் வாக்கெடுப்பினைத் தாயகத்திலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் நடத்தி தேசியப்பிரச்சனைக்குத் தீர்வு காண எந்த ஆட்சி முன்வருகிறதோ அந்த ஆட்சி மட்டுமே நல்லாட்சியாக இருக்க முடியும்.
 
இவ்வகையான மேம்பட்ட சிந்தனைக்கு சிறிலங்காவின் எந்த ஆட்சியாளரும்; தயாராக இல்லை. தற்போதய ஆட்சியாளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடன் பேசி ஒற்றையாட்சி ஆட்சிமுறையை சமஸ்டி போலக் காட்டும் வகையிலான ஓர் அரசியலமைப்பின் மூலம் தேசியப்பிரச்சினைக்குத் 'தீர்வு' காணும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
இத் திட்டத்தின்படி வடக்கு கிழக்கு இணைக்கப்படப் போவதில்லை. மத்தியில் குவிக்கப்பட்ட அதிகாரங்களில் சில மாகாணங்களுக்குக் கிள்ளித் தெளிக்கப் படவுள்ளன. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைக் கிஞ்சித்தேனும் எட்ட முடியாத ஒரு திட்டமாகத்தான் புதிய திட்டம் அமையப்போகிறது.  
 
தமிழ் மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட வகையில் வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி அடிப்படையிலான தீர்வு என்பதே கூட்டமைப்பினர் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதி. இந்த வாக்குறுதிக்கு மாறான எந்தத் தீர்வுவடிவம் குறித்தும் அரச தலைவர்களுடன் கூட்டமைப்புத் தலைவர்கள் எவ்வகை அங்கீகாரத்தின் அடிப்படையில் பேச்சுக்கள் நடத்த முடியும்?
தமிழ் மக்களின் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் போன்ற அடிப்படை நிலைப்பாடுகளை சிறிலங்கா அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லையெனவும் இதுவே யதார்த்தம் எனவும் இக் காரணங்களுக்காகக் கிடைப்பவற்றைப் பெற்றுக் கொண்டு தமிழ் மக்கள் தம்மைப் பலப்படுத்திக்; கொள்ள வேண்டும் எனக் கருதுபவர்களும் எம் மத்தியில் உள்ளனர். 
 
தமிழ் மக்கள் தாயகத்தில் தம்மைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் எமக்கு முரண்பாடு எதுவும் கிடையாது. இதேவேளை தேசியப் பிரச்சனைக்கான தீர்வு என்ற பெயரில் சிறிலங்கா அரசு முன்வைக்கவுள்ள அரைகுறைத் திட்டத்தை இனப்பிரச்சனைக்கான தீர்வாகத் தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதே எமது நிலைப்பாடு. 
 
தேசியம், தாயகம், சுயநிர்ணயம் என்ற அடிப்படை நிலைப்பாடுகளை சிறிலங்கா அரசு ஏற்றுக் கொள்ளும்வரை தமிழின அழிப்புத் திட்டத்தை சிங்களம் கைவிடப்போவதில்லை. இந்நிலையில் எத்தகைய அரசியல் தீர்வும் தமிழ் மக்கள் கௌரவமாகவும் சமத்துவமாகவும் பாதுகாப்பாகவும் இனஅழிப்புக்கு உட்படாமலும் தமது அரசியல் முடிவுகளைத் தமக்காகத் தாமே எடுக்கும் ஏற்பாடுகளைக் கொண்டதாகவும் அமைய வேண்டும் என்பதை நாம் இவ்விடத்தில் மீளவும் வலியுறுத்த விரும்புகிறோம். 
 
வடக்கு – கிழக்குப் பகுதியில் வாழும் முஸ்லீம் மக்களுக்கும் இப்பகுதி தாயகப் பிரதேசமே. முஸ்லீம் மக்களுடன் எத்தகைய அரசியல் ஏற்பாடுகளுக்கு வருதல் என்பது குறித்து தமிழ் - முஸ்லீம் அரசியல் தலைவர்கள் தமக்குள் பேசி ஓர் உடன்பாட்டை எட்டிக் கொள்ள வேண்டும்.
 
அமைவிடக்  கேந்திர முக்கியத்துவம் காரணமாக அனைத்துலக அரசுகளின் அக்கறைக்குரிய இடமாக இலங்கைத்தீவு இருந்து வருகிறது. தமிழ் மக்கள் இலங்கைத்தீவில் கேந்திர முக்கியத்துவம் உள்ள மக்களாக இருக்கிறார்கள். 
 
இருந்தும் தமது நலன்கள் சார்பாக இக் கேந்திர முக்கியத்துவத்தைப் பயன்படுத்துவதில் தமிழ் மக்கள் இதுவரை வெற்றியடையவில்லை. இது ஏன் என்பது குறித்து நாம் மிக ஆழமாகச் சிந்திக்க வேண்டும். மிக நீண்டகாலமாக அரசு அற்ற மக்களாக இருந்து வி;ட்டமையால் இராஜதந்திரப் பாரம்பரியச் செழுமை குறைந்த மக்களாக நாம் இருந்தமையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இது குறித்து ஈழத் தமிழர் தேசம் கூடுதல் கவனம் கொடுத்தல் அவசியம்.
 
மாவீரர்நாளை நினைவுகூரும் இவ் வேளை மறைந்த கியூபப் புரட்சியின் தலைவரும் முன்னாள் கியூப அரசதலைவருமான தோழர் பிடல் கஸ்ரோ அவர்களுக்கும் எமது தோழமை கலந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். 
 
உலகின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஓர் ஆதர்ச நாயகனாக விளங்கியர் அவர். புரட்சி குறித்த நம்பிக்கையினை புரட்சியாளர்கள் மத்தியில் விதைத்ததில் பிடல் கஸ்ரோவுக்கும் சே குவேராவுக்கும் முக்கிய பங்குண்டு. 
 
பிற்காலத்தில் கியூப அரசின் சிந்தனை ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக மையம் கொள்ளாது தமது அரச உறவுகளையும் கோட்பாட்டு நிலைப்பாடுகளையும் மையம் கொள்ளத் தொடங்கிய பின்னர் கியூப அரசானது ஒடுக்குமுறையாளர்களுடன் கைகோர்த்துக்கொண்டு விடுதலைக்காகப் போராடுகின்ற மக்களுக்கெதிராகச் செயற்பட்டமையினையும் இத் தருணத்தில் கவலையுடன் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. எரித்திரிய விடுதலைப் போராட்டத்திலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் இது நிகழ்ந்துள்ளது. 
 
அன்பான மக்களே!
 
மாவீரர்கள் உயர்ந்தவொரு இலட்சியத்தை நமது தேசமெங்கும் விதைத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். உலக விழுமியங்களின் பாற்பட்ட ஒரு சுதந்திரமான வாழ்வு என்ற வேணவாவுடன் தமது வாழ்வை எமக்காக ஈகம் செய்திருக்கிறார்கள்.
 
சாதாரண மனிதர் எவரும் கற்பனை பண்ணக்கூட முடியாத அளவுக்கு அர்ப்பணிப்புடன் எம் முன்னால் வாழ்ந்து காட்டியுள்ளார்கள். சாவின் மீதான அச்சம் ஏதுமின்றி உரிமைகள் மீதான தமது பற்றுறுதியினை முரசறைந்து சென்றிருக்கிறார்கள். 
 
வீரம் என்பதற்கு புதிய அகராதி படைத்து உலகைத் தம் நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்கள். ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றை மூன்று தசாப்தகாலப் போராட்ட வாழ்வின் ஊடாகச் செதுக்கி விட்;டுச் சென்றிருக்கிறார்கள்.
 
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மாவீரர் கனவு சுமந்தே தமிழீழ இலட்சியத்தினைத் தனது அரசியற்கொள்கையாக வகுத்துள்ளது. மாவீரர்களை நினைவு கொள்ளும் இன்றைய புனிதநாளில் மாவீரர்கள் கனவை நனவாக்க உழைத்திடுதல் என்பது நமது அறமாக இருக்க வேண்டும். மாவீரர் கனவை நனவாக்கும் மனவுறுதியுடன் உழைப்போம் என இன்றைய தினத்தில் மீண்டும் உறுதி எடுத்துக் கொள்வோமாக!
 
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்! 
 
நன்றி
 
 
விசுவநாதன் ருத்ரகுமாரன் 
பிரதமர்

உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் வழிபாடு

உடுத்துறை துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் வழிபாட்டு நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன.


கிளினொச்சி துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள்

கிளினொச்சி துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள்






காஸ்ரோ தான் கியூபா, கியூபா தான் காஸ்ரோ

கியூபா புரட்சியின் தந்தையும் கியுபாவின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ காலமானார். அவருக்கு வயது 90.ஃபிடல் காஸ்ட்ரோ உலகில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த ஒரு சர்வாதிகாரி.
அவரை ஒழித்துக் கட்ட அமெரிக்கா பல முறை முயன்றபோதும், காஸ்ட்ரோ ஒன்பது அமெரிக்க அதிபர்களைப் பார்த்துவிட்டார்.

அவர் அமெரிக்காவுக்கு தொடர்ந்து முள்ளாகவே இருந்தார் - அமெரிக்காவின் கொல்லைப்புறத்தில் ஒரு கம்யூனிஸ்ட் தலைவர்.அமெரிக்காவின் ஆதரவு பெற்ற ஊழல் மிகுந்த பட்டிஸ்டா அரசை அகற்றவேண்டும் என்று காஸ்ட்ரோ திடமாக இருந்தார்.

காஸ்ட்ரோவும், அவரது சக புரட்சியாளர்களும் அவர்கள் ஒளிந்திருந்த மலைப் பகுதியிலிருந்து ஒரு இலக்கண சுத்தமான கெரில்லாப் போரை தொடங்கினர்.1959ல் வெற்றி நாயகனாக காஸ்ட்ரோ தலைமையிலான படைகள் தலைநகர் ஹவானாவுக்குள் நுழைந்தன. பட்டிஸ்டா தப்பியோடினார். கியூபாவில் புதிய அரசு அமைந்த்து. அதில் புகழ்பெற்ற செகுவெராவும் பதவி வகித்தார்.

அது மக்களுக்கு அவர்களின் நிலங்களை திரும்பத் தருவதாக வாக்களித்தது. ஏழை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் உறுதியளித்தது.அதன் பிறகு காஸ்ட்ரோ, கியூபாவின் சக்தி மிக்க அண்டைநாடான அமெரிக்காவுக்குச் சென்று, நேசக்கரம் நீட்டினார்.ஆனால் அமெரிக்க அதிபர் ஐஸன்ஹோவர் அவரை சந்திக்க மறுத்த நிலையில், தான் நிராகரிக்கப்பட்டது போல் காஸ்ட்ரோ உணர்ந்தார்.

அமெரிக்காவால் மூக்குடைபட்டதால், தான் சோவியத் ஒன்றியம் மற்றும் அதன் தலைவர் நிக்கிட்டா குருஷேவின் செல்வாக்கு வளையத்துக்குள் செல்ல நேரிட்ட்தாக அவர் கூறினார்.கியூபா அந்த கட்டத்தில் சோவியத் ஒன்றியத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவிய பனிப்போரின் ஒரு யுத்த களமாக மாறியது.
ஏப்ரல் 1961 பன்றிகள் குடா யுத்தம். இது கியூப புலம்பெயர்ந்த மக்களில் சிலரை ஒரு தனி ராணுவமாக ஆட்சேர்ப்பு செய்து அவர்களை கியூபாவிற்குள் ஊடுருவ வைத்து, காஸ்ட்ரோவை அகற்ற அமெரிக்கா எடுத்த தோல்வியில் முடிந்த முயற்சி.

ஆனால் இளம் புரட்சியாளரானா காஸ்ட்ரோ அந்த முயற்சியை முறியடித்தார்.அதற்கு ஒரு ஆண்டுக்கு பின்னால் மேலும் பெரிய நெருக்கடி. அமெரிக்காவின் வேவு பார்க்கும் விமானங்கள் சோவியத் ஒன்றிய ஏவுகணைகள் கியூபாவை நோக்கி கொண்டு செல்லப்படுவதைக் கண்டன. உலகம் ஒரு அணு ஆயுதப் போரின் விளிம்பில் நின்றது.
இரு வல்லரசுகளும் நேருக்கு நேர் மோதல் நிலையில்.

ஆனால் இறுதியில் சோவியத் ஒன்றிய தலைவர் குருஷேவ்தான் முதலில் பணிந்தார். கியூபாவில் உள்ள ஏவுகணைகளை அங்கிருந்து அகற்றினார். அதற்கு மாறாக, துருக்கியில் வைக்கப்பட்டிருந்த அமெரிக்க ஆயுதங்களை விலக்கிக்கொள்ள அமெரிக்கா ரகசியமாக ஒப்புக்கொண்டது.ஆனால் இதன் விளைவு, காஸ்ட்ரோ அமெரிக்காவின் முதல் விரோதியானார். பல முறை அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ அவரைப் படுகொலை செய்ய முயன்றது.

அவர் சிகார் புகைக்கும் பழக்கம் உள்ளவர் என்பதால், ஒரு முறை அவர் புகைக்கும் சிகாரில் கூட வெடிமருந்துகளை நிரப்பி அவரைக் கொல்ல முயன்றது சி.ஐ.ஏ. வேறு பல சதித்திட்டங்கள் இன்னும் விநோதமானவை.
ஒரு பவுடரைத் தயாரித்து அவரது முகத்தில் தடவி, அவர் தாடி முடி கொட்டிவிடுமாறு ஒரு திட்டம். இது நடந்தால் மக்கள் அவரை நோக்கி சிரிப்பார்கள் என்பது திட்டம்.ஆனால் அமெரிக்கா கியுபாவுக்கு எதிரான சதியில் ஈடுபட்டிருந்த வேளையில், சோவியத் ஒன்றியம் கியூபாவிற்கு பண உதவியைக் கொட்டியது. கியூபாவில் உற்பத்தியாகும் கரும்பில் உற்பத்தியாகும் சர்க்கரையை சோவியத் ஒன்றியம் இறக்குமதி செய்த்து. சோவியத் ஒன்றியக் கப்பல்கள் ஹவானா துறைமுகத்தில் நங்கூரமிட்டபடியே இருந்தன. அமெரிக்க விதித்த பொருளாதரத் தடைகளால் கியுபா பாதிக்கப்படாமல் இருக்க , சோவியத் ஒன்றியம் அக்கப்பல்களில் பொருட்களை வழங்கி வந்த்து.

ஆனால் சோவியத் கம்யூனிசம் வீழ்ந்த போது கியூபப் பொருளாதாரமும் வீழ்ந்தது.
இந்த சின்ன்ஞ்சிறு நாடு பொருளாதார சரிவை எதிர்நோக்கியது. உணவுக்காக மக்கள் வரிசையில் நிற்க நேரிட்ட நிலையில், அவர்களின் கோபம் அதிகமானது.1990களில் கியுப மக்கள் பலருக்கு காஸ்ட்ரோவின் கம்யூனிச ஆட்சி போதும் போதுமென்றாகிவிட்ட்து.பல ஆயிரக்கணக்கான கியூபர்கள் ஆபத்தான படகுகளில் கடல் மூலம் அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்துக்கு தப்பியோடினர்.

அது பிடல் கேஸ்ட்ரோ மீது மக்கள் காட்டிய அவநம்பிக்கையின் அப்பட்டமான வெளிப்பாடு.
அந்த கியூப புலம்பெயர் மக்கள், காஸ்ட்ரோவின் ஆட்சியைக் குலைக்க பெரும் பிரயத்தனம் எடுத்தனர்.
ஆனாலும், கியுபாவில் தான் செய்த சாதனைகள் சிலவற்றுக்காக காஸ்ட்ரோ பெருமைப் படலாம்.
அனைவருக்கு இலவசமாக கிடைத்த உயர்தர மருத்துவ சேவைகள் , தொழில் வளம் பெற்ற நாடுகளுக்கு சமமாக எட்டப்பட்ட எழுத்தறிவு போன்றவை அவரது சாதனைகள்.

ஆனால் 2006ம் ஆண்டு, உடல் நலக்குறைவால் காஸ்ட்ரோ தனது சகோதரர் ரவூலுக்கு அதிகாரத்தைக் கையளிக்க நேர்ந்தது.ரவூல் , அவரது அண்ணனின் சாதனைகளை கைவிடாமல், பல புதிய சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.
அதிகாரத்தில் இல்லாத காஸ்ட்ரோ, உடல் ரீதியாக பலவீனமடைந்து, பொது வெளியில் அபூர்வமாகவே காணப்பட்டார். இப்படம் ஜனவரி 2014ல்.

அதன் பின்னர் அந்த ஆண்டு, அமெரிக்காவும் கியூபாவும் தங்கள் உறவுகளில் சுமுக நிலையை எட்ட முயற்சிகளைத் தொடங்கின.ஃபிடல் காஸ்ட்ரோ 20 நூற்றாண்டின் ஒரு மாபெரும் தலைவராக விளங்கினார். அவரது தாக்கம் மெல்ல மெல்லத்தான் மறையும்.

பல கியூப பிரஜைகள் அவரை வெறுத்தாலும், பலர் அவரை மிகவும் நேசித்தனர். அமெரிக்கா என்ற கொலையாத்தை எதிர்த்த டேவிட் என்று அவரை அவர்கள் பார்த்தனர்.அவர்களுக்கு காஸ்ட்ரோதான் கியூபா , கியுபாதான் கேஸ்ட்ரோ.
.

மறைந்த கியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்

மறைந்த கியூபப் புரட்சியின் தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ குடல் உபாதை காரணமாக 2006ல் தனது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவிற்கு தற்காலிகமாக தனது அதிகாரங்களை வழங்கினார்.

பின்னர் இரண்டாண்டுகளுக்குப் பிறகு, ரவுல் காஸ்ட்ரோ முழுமையாகப் பதவிப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
கியூபா புரட்சியின் தந்தை ஃபிடல் காஸ்ட்ரோ மறைந்தார்


உலக வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் ஃபிடல் காஸ்ட்ரோவின் வாழ்க்கையில் இருந்து சில முக்கிய துளிகள்
1926 : கியுபாவின் தென் கிழக்கு மாநிலமான ஓரியண்ட் மாகாணத்தில் பிறப்பு.
1953: பட்டிஸ்டா அரசுக்கு எதிராக நடத்தி தோல்வியில் முடிந்த கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய பிறகு சிறை வைப்பு
1955: பொது மன்னிப்பின் கீழ் சிறையிலிருந்து வி்டுதலை
1956: செ குவெராவுடன் இணைந்து அரசுக்கு எதிராக கெரில்லாப் போர் தொடக்கம்
1959: பட்டிஸ்டா அரசை தோற்கடித்து, கியுபாவின் பிரதமராகப் பதவியேற்பு
1961: கியுபாவிலிருந்து வெளியேறி நாடுகடந்த நிலையில் இருந்தவர்களால், அமெரிக்க உளவு நிறுவனமான, சி.ஐ.ஏவின் உதவியுடன் நடந்த ‘ பன்றிகள் குடா’ ( Bay of Pigs) ஆக்ரமிப்பு தோற்கடிப்பு.
1962: சோவியத் ஒன்றியத்தின் ஏவுகணைகளை கியுபாவில் நிலைநிறுத்துவதற்கு உடன்பட்டதன் மூலம், அமெரிக்காவுடன் போர் மூள வைத்திருக்கக்கூடிய `கியூபா ஏவுகணை நெருக்கடி`தூண்டப்பட்டது.
1976: கியுபாவின் தேசிய நாடாளுமன்றத்துக்குத் தேர்வு
1992: அமெரிக்காவுடன் கியூபா அகதிகள் தொடர்பில் ஒப்பந்தம் எட்டப்படுகிறது.
2008: கியூப அதிபர் பதவியிலி்ருந்து உடல் நலக் குறைவு காரணமாக காஸ்ட்ரோ பதவி விலகல்.

கியூபா புரட்சியின் தந்தை பிடல் காஸ்ரோ மறைந்தார்

கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும் கம்பியூனி] புரட்சித் தலைவருமான பிடல் கஸ்ட்ரோ தனது 90ஆவது வயதில் காலமானார்.

’’கியுபப் புரட்சியின் தலைமைத் தளபதி வெள்ளிக்கிழமை இரவு 10.29 (இந்திய இலங்கை நேரப்படி சனிக்கிழமை காலை 9 மணி) மணிக்கு காலமானார்’’, என்று அவரது சகோதரரும் கியுப அதிபருமான ரவுல் காஸ்ட்ரோ அறிவித்திருக்கிறார்.
ஃபிடல் காஸ்ட்ரோ கியுபாவை சுமார் 50 ஆண்டுகளுக்கு ஒரு கட்சி அரசாக ஆண்டு வந்தார். அவரது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ 2008ல்தான் அவருக்கு அடுத்த அதிபராகப் பதவியேற்றார்.

மிகவும் சோகமான முகத்துடன் கியுபா அரச தொலைக்காட்சியில் எதிர்பார்க்கப்படாத பின்னிரவு ஒளிபரப்பில் இந்த அறிவிப்பை ரவுல் காஸ்ட்ரோ செய்தார்.

ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதிக்கிரியைகள் சனிக்கிழமை நடக்கும் என்றும் அவர் அறிவித்தார்.
ஃபிடலின் மறைவையொட்டி கியூபாவில் பல நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும்.

அவ்வப்போது அவர் எழுதி வந்த பத்திரிகை கட்டுரைள் தவிர, ஃபிடல் காஸ்ட்ரோ அரசியல் வாழ்விலி்ருந்து ஏறக்குறைய ஓய்வு பெற்ற நிலையிலேயே இருந்தார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் , நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸின் கடைசி நாளன்று, ஃபிடல் , அபூர்வமாகத் தோன்றி உரையாற்றினார்.

உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 07 மணிக்கு அவர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

மிக நீண்ட காலம் அந்த நாட்டு ஜனாதிபதியாக பதவி வகித்த பிடல் கஸ்ட்ரோ, கடந்த 2008ஆம் ஆண்டு ஆட்சியை தனது சகோதரனான ராவுல் கெஸ்ட்ரோவிடம் ஒப்படைத்து விட்டு ஓய்வு பெற்றார்.

1920ஆம் ஆண்டு தென் கிழக்கு கியூபாவின் ஒரியன்டே மாகாணத்தில் பிறந்த பிடெல் கஸ்ட்ரோ, 1976ஆம் ஆண்டு அந்த நாட்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

வரலாற்று மையத்தில் தலைவர் பிறந்த நாள் விழா

அன்பார்ந்த மக்களே, 
தமிழினத்தின் தனித்துவத்தை தரணியெங்கும் தலைநிமிர்த்திய எமது தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 62வது பிறந்த நாளான 26-11-2016 அன்று காலை 11 மணிக்கு பிரித்தானியாவில் அமைந்துள்ள  உலகத் தமிழர் வரலாற்றுமைய வளாகத்தில் (Mill Farm Lane, Barnbury, Oxford, OX17 3NX) 62 பானைகளில் பொங்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 
 
எமது தேசியத் தலைவரின் பிறந்தநாள் நிகழ்வில் அனைவரையும் வந்து கலந்து சிறப்பிக்குமாறும், குறிப்பாக சிறுவர்களை அழைத்துவருமாறும்  அன்புடன் அழைக்கிறோம்.
 
நன்றி
உலகத் தமிழர் வரலாற்று மையம்.
ஐக்கிய இராச்சியம்.
 
 

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…